ஆரவல்லி சூரவல்லி கதை

From Tamil Wiki
Revision as of 23:19, 16 January 2022 by Navingssv (talk | contribs) (ஆரவல்லி சூரவல்லி கதை)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஆரவல்லி சூரவல்லி கதை தமிழக நாட்டார் காவியங்களில் ஒன்று. நாட்டார் காவியங்கள் வாய்மொழி பாட்டாகவும், தெருக்கூத்து போன்ற கூத்துகள் வழியாகவும் நீடிப்பது. செவ்வியல் காவியம் கொண்ட இலக்கணங்கள் இல்லாதது. இந்த கதைப்பாடல்களை வகைப்படுத்தும் போது நா.வானமாமலை இதனை காவிய வகையில் அடக்குகிறார். “மூலக்காவிய மரபிலிருந்து மாறுபட்டு நாட்டார் தன்மையுடன் உருவாக்கப்பட்டவை” என்கிறார்.

இத்தகைய கதைப்பாடல்கள் பெரும்பாலும் மக்களின் வாய்மொழி மரபிலிருந்தே நீடித்து வருவது. தமிழின் நாட்டார் வழக்காற்றியலில் கூத்து, பழமொழி, விடுகதை, பாடல்கள், வாய்மொழிக் கதைகள், சுவரோவியங்கள், வழிபாட்டுக் கூறுகள் ஆகியன அடங்கும். அவற்றில் இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களின் செல்வாக்கும் அதிகம் உண்டு. வட தமிழ்நாட்டின் நாட்டார் மரபை அதிகம் பாதித்தது மகாபாரத கதைகள். ஆரவல்லி சூரவல்லி கதை தமிழகத்தில் இருக்கும் மகாபாரத கிளை கதைகளுள் ஒன்று. இந்த கதை அம்மானை வடிவில் அமைந்தவை.

பதிப்பு வரலாறு

ஆரவல்லி சூரவல்லி கதையை முதலில் அச்சில் 1887 ஆம் ஆண்டு பொன்னுசாமி முதலியார் பதிப்பித்தார். இந்த கதை 3,638 வரிகள் கொண்டது. அ.கா.பெருமாள் இந்த வகை மகாபாரத அம்மானை பாடல்களை திரட்டி ஆய்வு செய்து வெளியிட்ட தன் “அர்ஜீனனின் தமிழ்க் காதலிகள்” என்னும் நூலில் இந்த கதையின் சுருக்கம் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர்

இந்த பாடலை பாடியது புகழேந்தி புலவர் என்னும் வாய்மொழி மரபு உண்டு. இவர் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என தன் “இலக்கிய வரலாறு” நூலில் சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். ஆய்வாளர் தெ.பொ.மீயும் அதனை ஒத்துக் கொள்கிறார். ஆரிய சேகரன் என்னும் பாண்டிய நாட்டு படைத்தலைவன் காலத்தவர் புகழேந்தி என்பதற்கும் சான்று உண்டு. இவர் ஒரு புனைவு அட்டாவதானம் வீராசாமி செட்டியாரே அம்மானைப் பதிப்புகளில் புகழேந்திப் புலவரின் பெயர் சேர்த்தார் என தமிழ்க் கதைப்பாடல்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் எழுதிய மு.அருணாசலம் சொல்கிறார். செட்டியார் தம் காலத்தில் வழங்கிய வாய்மொழிக் கதைகளை புகழேந்திப் புலவரின் பெயரில் சேர்த்துச் சொன்ன தகவல்களை பீ.ஆர்.என் சன்ஸ் (B.R.N Sons) போன்ற பதிப்பாளர்கள் சொன்ன தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

கதை

பாண்டவர் கௌரவரோடு சமாதானமாக இருந்த காலக்கட்டத்தில் தருமர் தன் நாட்டை அமைதியாக ஆண்டுவந்தார். கிருஷ்ணன் தருமனிடம் சென்று, “ பாண்டவர்கள் ஐந்து பேரும் வீரர்கள் தான் ஆனால் அண்டை நாடான ஆரவல்லிப் பட்டிணத்தில் ஆரவல்லியின் ஆட்சி நடக்கிறது அவள் ஆட்சியின் முன் உங்கள் வீரத்தில் குறையுள்ளது. அந்த குறையை போக்க ஐந்து பேரும் ஆரவல்லிப் பட்டிணத்தின் மீது போர் தொடுங்கள்” என்றான். தருமனுக்கு அது உவப்பானதாக படவில்லை, “போருக்கு வலிய போவது தருமமற்றது. எனவே அவர்களோடு போர் செய்வது தேவையற்றது” என்றார்.

தன் எண்ணம் நிறைவேறாததை நினைத்து கண்ணன் வேறு திட்டம் தீட்டினான். நேராக ஆரவல்லிப் பட்டித்தின் தலைநகரான நெல்லூருக்கு சென்றான். அங்கே இருந்த ஆரவல்லியின் சண்டை சேவலிடம் பாண்டவரை போருக்கு அழைக்கும்படி தூண்டி விட்டான். மறுநாள் காலையில் காலைக்கடனை கழிக்க பீமன் ஊர் எல்லைக்கு சென்றபோது அங்கே சேவல் நின்று பீமனை போருக்கு அழைக்கும் குரல் கேட்டது. சினம் கொண்ட பீமன் தன் கதையை தூக்கிக் கொண்டு ஆரவல்லிப் பட்டிணத்திற்கு விரைந்தான். அவன் வருவதை அறிந்த ஆரவல்லி தன் படை மிருகங்களை மாயபொடியால் உருவாக்கி அனுப்பினாள். பீமன் தன் கதையால் அவை அனைத்தையும் அடித்துவிட்டு நெல்லூருக்கு வந்தான்.

வேறு வழியின்றி பீமனை ஆரவல்லி நேருக்கு நேர் சந்தித்தாள். அங்கே ஆரவல்லியின் சேவலுடன் தன் சேவலை சண்டைக்கு விட்டான். மாயம் அறிந்த ஆரவல்லியின் சேவல் அதனை வென்றுவிட்டது. பீமனின் சேவல் தோற்றது. ஆரவல்லியின் தோழி பெண்கள் பீமனை கைது செய்து சிறையில் அடைத்து வைத்தனர். விஷயம் அறிந்த கிருஷ்ணன் யானை வடிவம் கொண்டு பீமனின் விலங்கை கழட்டினான். விடுதலை பெற்றது தான் தாமதம், கிருஷ்ணனின் தயவால் பீமன் அங்கிருந்து தப்பி ஓடினான்.

சிறை உடைக்கப்பட்டு பீமன் தப்பித்ததை அறிந்த ஆரவல்லி தருமனுக்கு ஓலை எழுதினாள். “உயர்ந்த ராஜ வம்சத்தில் பிறந்து சிறைப்பட்டவன் தெரியாமல் தப்பி ஓடுவது தான் உங்கள் வீரத்தின் மாண்பா?” என எழுதி அனுப்பினாள். சினம் கொண்ட தருமன் ஆரவல்லி பட்டிணத்தின் மீது படையெடுக்க படையை திரட்டினான். அவனை இடைமறித்த சகாதேவன், “பாண்டவர்கள் ஐந்து பேரும் ஆரவல்லிப் பட்டிணத்தின் மீது படையெடுத்து சென்றால் நாம் தோற்பது உறுதி” என்றான். பீமன் தருமனை சமாதானம் செய்து, “அண்ணா நம் தங்கை மகனான அல்லிராசனை அனுப்பலாமா” எனக் கேட்டதும் சகாதேவன், “அவனை அனுப்பலாம் அவன் சென்றால் ஆரவல்லி நாட்டை அழிப்பது உறுதி” எனக் கணித்து சொன்னான்.

தன் ஒரே மகன் போருக்கு செல்வதை விரும்பாத பாண்டவர்களின் தங்கை அவர்கள் யோசனைக்கு மறுக்கிறாள். தருமன் அபிமன்யுவை அவளுக்கு சுவிகாரம் செய்து தருவதாக வாக்கு கொடுத்த பின் அவர்களின் யோசனைக்கு அவள் சம்மத்திக்கிறாள். விஷயத்தை சொன்னதும் பெருவீரனான அல்லிராசன் ஆரவல்லிப் பட்டிணத்தின் மீது போர் தொடுக்க உடனே கிளம்பினான்.

பீமன் அல்லிராசனுக்கு ஆரவல்லியின் சேவலை வெல்லும் யுக்தியை சொல்லித் தந்தான். ஆரவல்லி மந்திரம் செய்வதையும், மாயப் பொடி போட்டு புலி, கரடிகளை வரவைப்பதையும், சூழ்ச்சி செய்வதையும் சொல்லி எச்சரித்தான். அல்லிராசன் வீரமே உருவான நம் பரம்பரையில் அதற்கான பயம் எதற்கு என வீரமொழி பேசினான்.

கிளம்புவதற்கு முன் நகுலன் அவனுக்கு அழகான புரவி ஒன்றை அளித்தான். தன் அத்தை திரௌபதியிடம் விடைப்பெற்ற போது அவள் ஒரு பெட்டியை கொடுத்து, ”இதனை கையில் வைத்துக் கொள். இந்த பெட்டி உன்னிடம் இருக்கும் வரை எந்த மாயமும், பில்லிசூனியமும் உன்னை பாதிக்காது” என விடைக் கொடுத்து அனுப்பினாள்.

அல்லிராசன் ஊர் எல்லையில் இருந்த காளிக் கோவிலுக்கு சென்று அவளை துதித்துப் பாடினான். கருவறையில் தூங்கிக் கொண்டிருந்த காளி அல்லிராசன் துதிப்பாடல்களை கேட்டு விழித்தாள். அவன் அவளை எழுந்தருளும் படி பணிந்து வேண்டினான். அவன் வேண்டுதலைக் கேட்டு காளி எழுந்தாள். அவளது பேருருவை கண்டு போற்றி பாடினான். அவள் அவனுக்கு யாராலும் வெல்ல முடியாத வீர வாளை கொடுத்து ஆசிர்வதித்தாள்.

அல்லிராசன் அந்த வாளுடன் ஆரவல்லிப் பட்டிணத்திற்கு சென்று ஆரவல்லி மாயபொடியால் அனுப்பிய புலி, கரடியை விரட்டியடித்தான். அவன் புரவியில் ஏறி வருவதை தன் தூதர்கள் மூலம் அறிந்த ஆரவல்லி மாயம் அறிந்த பெண்களை அவனுடன் போர் செய்யும்படி அனுப்பினாள். அவர்களை அனைவரையும் வென்று நெல்லூரை அடைந்தான் அல்லிராசன். ஆரவல்லியின் தங்கை சூரவல்லியையும் வீழ்த்தினான்.

அவன் நெல்லூருக்கு சென்று ஆரவல்லியை சேவல் போருக்கு அழைத்தான். வேறு வழியின்றி அவள் போருக்கு ஒப்புக்கொண்டாள். பீமன் சொன்னது போல் ஆரவல்லியின் சேவல் சூழ்ச்சி செய்தது. அல்லிராசன் திரௌபதி கொடுத்த பெட்டியால் அனைத்து சூழ்ச்சிகளையும் வென்றான். அல்லிராசனின் வீரத்தை சோதனை செய்ய அவன் முன் இரும்புக் கம்பத்தைக் கொடுத்து அதனை இரண்டு துண்டாக்கும் படி சொன்னாள். அல்லிராசன் அதனை மூன்று துண்டாக்கினான்.

அல்லிராசனின் வீரத்தை பாராட்டி அவனுக்கு தன் ஒரே மகளான பல்வரிசையை மணம் செய்துக் கொடுக்க சம்மதித்தாள். பல்வரிசை அழகில் ரம்பை. ஆரவல்லி போல் மாய மந்திரம் அறியாதவள். வெகுளி பெண்ணான பல்வரிசை அல்லிராசனும் மணம் செய்ய போவதை எண்ணி மகிழ்ந்தாள். அல்லிராசன் ஆரவல்லியிடம், “தனக்கு திருமணம் நெல்லூரில் வேண்டாம்” என்றான்.

“என் திருமணம் என் மாமாவின் சம்மதத்துடன் நடக்க வேண்டும். நான் பல்வரிசையை என்னுடன் அழைத்து செல்கிறேன். எங்கள் திருமணம் அங்கே நடைபெறும்” என்றான். ஆரவல்லி அவன் சொல்லுக்கு சம்மதித்தாள். தன் மகள் பல்வரிசையை தனியே அழைத்து, “அல்லிராசனுக்கு தாகம் எடுத்தால் இந்த மலரை நுகரக் கொடு, அதன்பின் இந்த பழத்தை பிழிந்து கொடு” என மலரையும், பழத்தையும் பல்வரிசையிடம் கொடுத்தாள்.

செல்லும் வழியில் அல்லிராசன் தாகம் என்றதும் மலரை எடுத்து அவனுக்கு நுகரக் கொடுத்தாள் பல்வரிசை. அல்லிராசன் மயங்கி விழுந்தான். தன்னிடம் இருந்த பழத்தை பிழிந்து அவனிடம் கொடுத்தாள். அவன் இறந்தவன் போல் பிணமானான். நடுக்காட்டில் செய்வதறியாது தவித்தாள் பல்வரிசை. பின் நெல்லூருக்கு ஓடி சென்று தன் தாயிடம் நடந்ததை சொன்னாள். தன் திட்டம் ஈட்டேறியதை எண்ணி ஆரவல்லி மகிழ்ந்தாள். பல்வரிசையை இருட்டு அறையில் பூட்டினாள்.

அல்லிராசனின் குதிரை நகுலனிடம் விரைந்து சென்று நடந்தது அனைத்தையும் சொன்னது. கோபம் கொண்ட பாண்டவர்கள் பெரும் படையைக் கொண்டு ஆரவல்லிப்பட்டிணத்தை தாக்கினர். பாண்டவர்களின் வருகையை அறிந்த ஆரவல்லி அவர்கள் அனைவரையும் கல்லாக்கினாள்.

தன் மகன் இறந்த செய்தியை அறிந்த அல்லிராசனின் தாய் பாண்டவர்களிடம் நியாயம் கேட்க விரைந்தாள். அவர்கள் சிலையாய் இருப்பதை அறிந்து அபிமன்யுவிடம் விஷயத்தை சொன்னாள். அபிமன்யு சொர்க்கம் சென்று அல்லிராசனின் உயிரை மீட்டு வந்தான்.

அல்லிராசனும், அபிமன்யுவும் சேர்ந்து காளிதேவியை வணங்கிவிட்டு ஆரவல்லி பட்டிணம் விரைந்தனர். தங்கள் எதிர்பட்ட பெண்கள் அனைவரையும் முற்றுமாக அழித்தனர். பின் ஏழு ரெட்டிப் பெண்கள் மூக்கையும் அரிந்து அவமானப்படுத்தினர். கண்ணனின் தயவால் பாணவர்களின் படை உயிர் பெற்று எழுந்தன. பல்வரிசை அல்லிராசனை கண்டு அவன் அருகில் ஓடிவந்து நின்றாள்.

பீமனுக்கு பல்வரிசை பேரில் சந்தேகம் வந்தது. சகாதேவன், “இவள் குற்றமற்ற பேதைப் பெண். இவளுக்கு பில்லிசூனியம் தெரியாது” என்று உறுதியளித்தான். அல்லிராசனுக்கும், பல்வரிசைக்கும் திருமணம் நடந்தது.

வரலாற்று பின்புலம்

”இந்த கதையில் வரும் ஆரவல்லி ஆந்திர நாட்டு அரசி ஒருத்தியின் பிரதிபலிப்பு.” என அ.கா.பெருமாள் சொல்கிறார்.

கதையில் வரும் சேவல் சண்டையும். கதை நிகழும் களமான ஆரவல்லிப் பட்டிணம், நெல்லூர் ஊர் மற்றும் அதில் வரும் முக்கிய கதாப்பாத்திரங்களான ஏழு ரெட்டிப் பெண்கள் அனைத்தும் அதனை உறுதி செய்கின்றன.

* அர்ச்சுனனின் தமிழ் காதலிகள் - அ.கா.பெருமாள்