under review

அழ.வள்ளியப்பா

From Tamil Wiki
Revision as of 01:46, 3 January 2023 by Tamizhkalai (talk | contribs)

To read the article in English: Azha. Valliyappa. ‎

அழ.வள்ளியப்பா
அழ.வள்ளியப்பா
அழ வள்ளியப்பா மணிவிழா
அழ வள்ளியப்பா இளமையில்

அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922 - மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்தவர். 2,000-க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதி குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர். குழந்தைகளுக்கான இதழ்களை நடத்தினார்.

பிறப்பு, இளமை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரம் என்னும் சிற்றூரில் நவம்பர் 7, 1922 அன்று பிறந்தார். இவருடைய பெற்றோர் அழகப்ப செட்டியார் – உமையாள் ஆச்சி. உள்ளூரில் சு.கதி. காந்தி ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரையில் பயின்றார். பிறகு ராமச்சந்திரபுரத்திலுள்ள ஸ்ரீ பூமீஸ்வரசுவாமி உயர்நிலைப் பள்ளியில் 11-வது வகுப்பு வரையில் படித்தார். பின்னர் தமிழ்ப்பேராசிரியர்களான மதுரை முதலியார், இளவழகனார், மா.இராசமாணிக்கனார் ஆகியோரிடம் தமிழ் கற்றார்.

தனி வாழ்க்கை

1940-ஆம் ஆண்டில் வை. கோவிந்தன் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி. ஜ.ரங்கநாதனின் ஊக்குவிப்பின் காரணமாக சக்தி இதழிலேயே எழுத ஆரம்பித்தார். "ஆளுக்குப் பாதி" என்னும் தம் முதல் கதையை எழுதினார்.

அழ வள்ளியப்பா ஜனாதிபதி ராஜேந்திரப்பிரசாதுடன்

1941-ல் சக்தி பத்திரிகையில் இருந்து விலகி இந்தியன் வங்கியில் சேர்ந்தார். வங்கிப் பணியிலிருந்தவாறு கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கியவர் நவம்பர் 1982-ல் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எழுதினார். ஓய்வுக்குப் பின்பும் எழுதிக் கொண்டுதான் இருந்தார்.

சக்தி பத்திரிகையில் பணியாற்றிய போது பிப்ரவரி 4, 1942 அன்று வள்ளியம்மை ஆச்சியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகப்பன் எனும் மகனும், அலமேலு, கஸ்தூரி, உமையாள், தேவி என நான்கு மகள்களும் பிறந்தனர்.

இலக்கியவாழ்க்கை

அழ. வள்ளியப்பா தன் 13-ஆவது வயது முதல் கவிதை எழுதத் தொடங்கினார். இதழாசிரியராக தனது இலக்கிய வாழ்வை தொடங்கினார். பாலர் மலர், டமாரம், சங்கு ஆகிய இதழ்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஓய்வு பெற்ற பின் 1983 முதல் 1987 வரை, கல்கி வெளியீடான கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார். இந்தியன் வங்கியில் பணியாற்றும்போதே ஃபோர்டு ஃபவுண்டேஷன் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட தென்மொழிகளின் புத்தக டிரஸ்டின் குழந்தைநூல்களின் ஆசிரியராக 1957 முதல் 1962 வரை பணியாற்றினார்.

அழ.வள்ளியப்பாவின் 23 பாடல்கள் கொண்ட முதல் கவிதைத் தொகுதி மலரும் உள்ளம் 1944-ஆம் ஆண்டு வெளிவந்தது.

அமைப்புப் பணிகள்

1950-ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். 1950 முதல் 1955 வரை பொதுச்செயலாளராக இருந்தர். 1956 முதல் 61 வரை தலைவராகவும் 1962 முதல் 1967 வரை ஆலோசகராகவும் 1968 முதல் 1989 வரை தலைவராகவும் பணியாற்றினார்.

அழ வள்ளியப்பா 1959,1961,1963,1972,1977,1979 ஆண்டுகளில் சென்னையில் குழந்தை எழுத்தாளர் மாநாடுகளை நடத்தினார். 1981ல் காரைக்குடியிலும் 1987ல் கோவையிலும் இந்த மாநாடுகள் நடந்தன.

அழ.வள்ளியப்பா தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் 1956 முதல் 1959 வரை பொதுச் செயலாளர், 1959 முதல் 1960 வரை துணைத் தலைவர் ,1961ல் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் , 1966 ஆம் ஆண்டில் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். 'தமிழ் எழுத்தாளர் யார் - எவர்' என்ற விவரத் தொகுப்பு நூலைத் தயாரித்து வெளியிட்டார்.

பிறபணிகள்

• 1956-ல் டில்லியில் சாகித்ய அகாதெமி நடத்திய அகில இந்திய புத்தகக் கண்காட்சியின், தமிழ் பகுதி அமைப்பாளராகப் பணிபுரிந்தார்.

• தமிழக அரசு நடத்திய பாரதியாரின் 81 ஆம் ஆண்டு விழாக் குழுவில் உறுப்பினராக இருந்து, பாரதி கண்காட்சி நடத்தினார்.

• 1961-ல் கொழும்பு நகரில், இலங்கைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சர்வதேசப் புத்தகக் கண்காட்சியைத் துவக்கிவைத்தார்.

• 1962-ல் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கப் பேரவை நடத்திய மாநாட்டிற்கு வரவேற்புக் குழுத் தலைவர்.

• 1962-ல் கொழும்பு நகரில் நடந்த யுனெஸ்கோ கருத்தரங்கில், இந்திய நூலாசிரியர்களின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.

• சிம்லா, புவனேஸ்வர், பெங்களூர், மைசூர், டில்லி முதலிய இடங்களில் நடைபெற்ற குழந்தை இலக்கியக் கருத்தரங்குகளில் பங்கு பெற்றார்.

இலக்கிய இடம்

தமிழ் குழந்தை இலக்கியத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களையும், 55-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். எளிய வார்த்தைகளுடனும், ஓசை நயத்துடனும் குழந்தை இலக்கியங்கள் படைத்தவர். அழ.வள்ளியப்பாவுக்கு முன்னரும் பின்னரும் பலர் குழந்தைப்பாடல்களை எழுதியிருந்தாலும் குழந்தைப்பாடல் எழுதியவர்களில் முதன்மையானவராக அவர்தான் கருதப்படுகிறார். கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை எழுதிய குழந்தைப்பாடல்கள் ஒப்புநோக்க கவித்துவமானவை. ஆனால் அழ.வள்ளியப்பா கவிதைகளே குழந்தைகளுக்கு பிடித்தவையாக இருந்தன. தலைமுறைகள் தாண்டினாலும் மாறாத குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொண்டு அவர் எழுதிய பாடல்கள்,

  • 'அம்மா இங்கே வா... வா...ஆசை முத்தம் தா... தா...’
  • 'மாம்பழமாம் மாம்பழம்...மல்கோவா மாம்பழம்...'
  • 'கைவீசம்மா கை வீசு...கடைக்கு போகலாம் கை வீசு...'

விருதுகள்

  • 1963-ஆம் ஆண்டில் லக்னோவில் நடைபெற்ற அகில இந்திய குழந்தை எழுத்தாளர் மாநாட்டில் பதக்கமும் பாராட்டிதழும் வழங்கப்பட்டன.
  • குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்று சில அமைப்புகள் பாராட்டி போற்றியுள்ளனர்.
  • 1982-ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினால் "தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்று விருதளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
  • 1982-ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்விக்குழுவில் வாழ்நாள் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
  • நவம்பர் 22, 1970 அன்று "குழந்தைக்கவிஞர் இலக்கியப்பணி" வெள்ளிவிழா சென்னையில் நடைபெற்றது.
  • பூவண்ணன் தலைமையில் இயங்கிய பாலர் பண்பாட்டுக்கழகம் 1980-ஆம் ஆண்டில் 'வள்ளியப்பா வானொலி-தொலைக்காட்சிச் சிறுவர் சங்கம்' என்னும் பிரிவைத் தொடங்கியது.
  • 'பிள்ளைக்கவியரசு' என்னும் பட்டத்தை சென்னை பாரதி இளைஞர் சங்கம் வழங்கியது.
  • 'மழலைக்கவிச்செம்மல்' என்னும் பட்டத்தை காரைக்குடி சர்வதேசக் குழந்தைகள் ஆண்டுவிழாக்குழு வழங்கியது.
நாட்டுடைமை

அழ. வள்ளியப்பாவின் நூல்களை 2009-ல் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.

படைப்புகள்

நூல்கள்

அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.

  • அம்மாவும் அத்தையும்
  • இனிக்கும் பாடல்கள் (பாடல்); இ.பதி. செப்டம்பர் 1991; குழந்தை புத்தக நிலையம், சென்னை; 27 பாடல்கள்
  • ஈசாப் கதைப் பாடல்கள் - முதல் தொகுதி (பாடல்) குழந்தைகள் புத்தக நிலையம், சென்னை-40;
  • ஈசாப் கதைப் பாடல்கள் - இரண்டாம் தொகுதி (பாடல்) குழந்தைகள் புத்தக நிலையம், சென்னை-40;
  • ஈசாப் கதைப் பாடல்கள் (பாடல்); முழுயான தொகுப்பு; 1987 ஜனவரி; குழந்தைகள் புத்தக நிலையம், சென்னை-40; 38 பாடல்கள்
  • உமாவின் பூனைக் குட்டி
  • எங்கள் கதையைக் கேளுங்கள் (விலங்கியற் கட்டுரைகள்); மு.பதி 1962; இ.பதி மார்ச் 1967; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 10 விலங்குகள் தங்களது கதையைத் தாங்களே கூறுகின்றன.
  • எங்கள் பாட்டி
  • கதை சொன்னவர் கதை - நூல் 1 (வரலாறு); மே 1962; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; கதைஞர்கள் 4 வரலாறு
  • கதை சொன்னவர் கதை - நூல் 2 (வரலாறு); மே 1962; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; கதைஞர்கள் 4 வரலாறு
  • கதை சொன்னவர் கதை - நூல் 3 (வரலாறு); மே 1962; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; கதைஞர்கள் 4 வரலாறு
  • குதிரைச் சவாரி (நெடுங்கதை); ஏப்ரல் 1978; பழநியப்பா பிரதர்ஸ், சென்னை
  • குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள் முதல் தொகுதி (பாடல்): 1962; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 50 பாடல்கள்
  • குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள் இரண்டாம் தொகுதி (பாடல்); 1962; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை;
  • குழந்தைக் கவிஞரின் வேடிக்கைப் பாடல்கள்; 1962
  • குழந்தைக்குரல் (பாடல்) தமிழ்நிலையம், புதுக்கோட்டை; பாடல்கள்
  • கேள்வி நேரம்
  • சிட்டுக் குருவி (பாடல்); ஜனவரி 1949; தமிழ்நிலையம், புதுக்கோட்டை; 16 பாடல்கள்
  • சிரிக்கும் பூக்கள் (பாடல்); 1986; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 110 பாடல்கள்
  • சின்னஞ்சிறு பாடல்கள் (பாடல்); 6-ஆம் பதிப்பு 1992; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 26 பாடல்கள்
  • சின்னஞ்சிறு வயதில் (வரலாறு), குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 38 பேர்களின் இளமைக்கால அனுபவங்கள்; தமிழ்நாடு அரசினர் பரிசுபெற்றது
  • சுதந்திரம் பிறந்த கதை (வரலாறு)
  • சோனாவின் பயணம் (கதை)
  • திரும்பி வந்த மான் குட்டி (கதை)
  • நமது நதிகள்: தென்னாட்டு ஆறுகள் (புவியியல்), தேசிய புத்தக டிரஸ்ட், புதுதில்லி. 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது
  • நல்ல நண்பர்கள் (கதை); பழனியப்பா பிரதர்ஸ், சென்னை; தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
  • நான்கு நண்பர்கள்: பஞ்சதந்திரக் கதைகள் (கதை); நவம்பர் 14, 1962; எஸ்.ஆர்.சுப்பிரமணியபிள்ளை, திருநெல்வேலி
  • நீலா மாலா (கதை); ஆகஸ்ட் 1977; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை
  • நேரு தந்த பொம்மை (பாடல்கள்); நவம்பர் 14, 1977; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 21 பாடல்கள்
  • நேருவும் குழந்தைகளும் (வாழ்க்கை வரலாறு); 1963;
  • பர்மா ரமணி (கதை); 1969; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை
  • பாப்பாவுக்குப் பாட்டு (பாடல் தொகுதி); தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
  • பாட்டிலே காந்தி கதை (பாடல் வரலாறு); அக்டோபர் 1968; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; இந்திய ஒன்றிய அரசின் பரிசு பெற்றது
  • பாட்டுப் பாடுவோம் (பாடல்); ஏப்ரல் 1998; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 12 பாடல்கள்
  • பாடிப் பணிவோம் (பாடல்); அக்டோபர் 1979; செல்வி பதிப்பகம், காரைக்குடி; 23 பக்திப்பாடல்கள்
  • பாலர் பாடல் (பாடல்); ஆகஸ்ட் 1947; தமிழ்நிலையம், புதுக்கோட்டை; 18 பாடல்கள்
  • பிள்ளைப் பருவத்திலே! (வரலாறு); 1968; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 29 பெரியோர்களைப் பற்றிய கட்டுரைகள்; தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
  • பெரியோர் வாழ்விலே முதல் தொகுதி (வரலாறு); 1955; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; எழுவர் வாழ்க்கை நிகழ்ச்சியைப் பற்றிய கட்டுரைகள்; தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
  • பெரியோர் வாழ்விலே இரண்டாம் தொகுதி (வரலாறு); குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; ஐவர் வாழ்க்கை நிகழ்ச்சியைப் பற்றிய கட்டுரைகள்
  • மணிக்கு மணி
  • மலரும் உள்ளம் முதல் தொகுதி (பாடல்), முதற்பதிப்பு 1944; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை; 23 பாடல்கள் கொண்டது,
  • மலரும் உள்ளம் முதல் தொகுதி (பாடல்), இரண்டாம்பதிப்பு 1954; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 135 பாடல்கள் கொண்டது; இந்திய ஒன்றியம்; தமிழ்நாடு அரசுகளின் பரிசு பெற்றது.
  • மலரும் உள்ளம் இரண்டாம் தொகுதி (பாடல்), 1961; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 117 பாடல்கள்
  • மல்லிகை (பாடல்)
  • மிருகங்களுடன் மூன்று மணி
  • மூன்று பரிசுகள்
  • ரோகந்தாவும் நந்திரியாவும்
  • ரோஜாச் செடி (கதை); மூன்றாம் பதிப்பு மே 1968; ஸ்டார் பிரசுரம், சென்னை
  • வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம், 1979, வானதி பதிப்பகம், சென்னை
  • வாழ்க்கை விநோதம்
  • விடுகதை விளையாட்டு
  • வித்தைப் பாம்பு (மொழிபெயர்ப்புக் கதை)
  • வெளிநாட்டு விடுகதைகள்
  • வேட்டை நாய்
தொகுத்த நூல்கள்
  • கேள்வி நேரம்: பெரியோரின் கேள்விகளும் பிள்ளைகளின் பதில்களும்; ஏப்ரல் 1988; தமிழ்நிலையம், புதுக்கோட்டை
பதிப்பித்த நூல்கள்
  • நிமிஷக் கதைகள்; தமிழ்நிலையம், புதுக்கோட்டை
  • பாலர் கதைகள் (3-ஆம் பதிப்பு); தமிழ்நிலையம், புதுக்கோட்டை
மொழிபெயர்த்த நூல்கள்
  • ரோகந்தாவும் நந்திரியாவும் (கதை); மூல ஆசிரியர்: கிருஷ்ண சைதன்யா; முதற்பதிப்பு 1972, நேஷனல் புக் டிரஸ்ட், சென்னை
  • எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள் (கதைகள்); மூல ஆசிரியர்: சாந்தா ரங்காச்சாரி; முதற்பதிப்பு 1977; நேஷனல் புக் டிரஸ்ட், சென்னை
சொற்பொழிவுகள்
  • 1979-ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்கி அறக்கட்டளை நிகழ்வில் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
  • 1981-ல் 5-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்
வாழ்க்கை வரலாறு

அழ. வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது மணிவிழா ஆண்டில் "குழந்தைக்கவிஞர் வள்ளியப்பா (வாழ்க்கை வரலாறு) என்னும் நூலை முனைவர் பூவண்ணன் எழுதினார். அதனை நவம்பர் 1982-ல் வானதி பதிப்பகம் வெளியிட்டது.

உசாத்துணை


✅Finalised Page