under review

அஃக்

From Tamil Wiki
Revision as of 20:40, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது)

To read the article in English: Ak. ‎

அஃக்

அஃக் (1972-1980) தமிழில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ். சேலத்தில் இருந்து மாதமொரு முறையாக வெளிவந்தது. அஃக் பரந்தாமன் இதை நடத்தினார். 1972 முதல் 1980 வரை 22 இதழ்கள் வெளிவந்தன.

வரலாறு

அஃக் இதழ் எழுத்தாயுத மாத ஏடு’ என்ற பிரகடனத்துடன் 1972 ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் இதழின் ஆசிரியரான பரந்தாமன் அவரது வீட்டில் தொடங்கிய பிருந்தாவனம் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்தது. அச்சுமுறையில் புதுமைகள் செய்து இதை அன்றைய சிற்றிதழ்கள் நடுவே அழகான வடிவமைப்புடன் வெளியிட்டார் பரந்தாமன். 1980 ஜூனில் இறுதி இதழ் வெளிவந்தது. மொத்தம் 22 இதழ்கள் வெளியாயின.

உள்ளடக்கம்

அஃக் இதழ் தமிழ் நவீன இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த வெவ்வேறு தரப்பினரின் ஆக்கங்களை வெளியிட்டது. கி. ராஜநாராயணன் எழுதிய 'ஜீவன்’ என்னும் கதை முதல் இதழிலேயே வெளியிடப்பட்டது. வண்ணதாசன், நகுலன், சார்வாகன், நாரணோ ஜெயராமன், ஆர்.ராஜேந்திர சோழன் போன்றவர்களின் கதைகள் வெளியாயின. அம்பை எழுதிய 'பயங்கள்', இந்திரா பார்த்தசாரதியின் 'போர்வை போர்த்திய உடல்கள்' போன்ற நாடகங்கள் வெளியாயின.

அஃக் இதழில் பசுவய்யா, பிரமிள் போன்றவர்களின் கவிதைகள் தொடர்ச்சியாக வெளிவந்தன. பிரமிளின் கண்ணாடியுள்ளிருந்து போன்ற கவிதைகள் வெளியாயின. பசுவய்யா (சுந்தர ராமசாமி) ஆறாண்டு இடைவெளிக்குப் பின் எழுதிய சவால் முதலிய மூன்று கவிதைகள் வெளியாயின. கலாப்ரியாவின் சக்தி நீள்கவிதை வெளியாகியது. தேவதேவன், தேவதச்சன், சி.மணி (வே.மாலி) நீலமணி, விக்ரமாதித்யன் போன்ற கவிஞர்கள் எழுதினர். நான்காவது இதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளியானது. அதில் பிரமிளின் E=MC2 என்னும் புகழ்பெற்ற கவிதை வெளியாகியது. கலாப்ரியாவின் சக்தி என்னும் கவிதை வெளியாயிற்று. அஃக் இதழில் இலக்கிய விவாதங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. க.நா.சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன், நாரணோ ஜெயராமன் போன்றவர்களின் கட்டுரைகள் விவாதங்களை உருவாக்கின. கசடதபறவில் தொடங்கப்பட்ட இந்திரா பார்த்தசாரதி – தினமணி கதிர் – அசோகமித்திரன் தொடர்பான சர்ச்சைகள் இடம்பெற்றன. (தினமணிக் கதிரில் வெளியான ஜெயகாந்தனின் ரிஷிமூலம் என்னும் கதை இதழாசிரியர் சாவியால் சுருக்கப்பட்டதை கண்டித்து வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரைக்கு அசோகமித்திரன், ஜெயகாந்தன், இந்திராபார்த்த சாரதி ஆகியோர் எதிர்வினையாற்றினர். 'இதழாசிரியர்களுக்கு படைப்புகளை வெட்டிச்சுருக்க உரிமை உண்டா?' என்னும் விவாதம் அது.)

இலக்கிய இடம்

அஃக் இதழ் முதன்மையாக அதன் அழகிய அச்சாக்கத்திற்காகவும், அதில் வெளிவந்த நாடகங்களுக்காகவும், பிரமிள், பசுவய்யா (சுந்தர ராமசாமி) எழுதிய கவிதைகளுக்காகவும் நினைவுகூரப்படுகிறது. அஃக் இதழின் கவிதைச்சிறப்பிதழ் மற்றும் கவிதை பற்றிய விவாதங்கள் தமிழ் புதுக்கவிதையின் வரலாற்றில் முக்கியமானவை. எழுபது, எண்பதுகளில் தமிழில் இலக்கியம் சிற்றிதழ்களை நம்பியே இயங்கியாகவேண்டிய சூழலில் தனியொருவராக அஃக் இதழ் வழியாக ஒரு களம் அமைத்துக்கொடுத்தார் அதன் ஆசிரியர் பரந்தாமன். ’பரந்தாமனுக்கு தலைவணங்குகிறேன். தேன் கூட்டை எத்தனை தரம் அழித்தாலும் திரும்பவும் திரும்பவும் அது கூடு கட்டித் தேன் நிரப்பும். அயராத உங்கள் செய்கை உணர்ச்சி வயப்படச் செய்கிறது என்னை. போராடுவதே வாழ்க்கை' என்று கி.ராஜநாராயணன் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

முழுத்தொகுப்பு

  • அஃக் முழுத்தொகுப்பு, சந்தியா பதிப்பகம் (2006)

விருது

  • 1976-ல் அஃக் பதிப்புக்கும் அச்சுக்கும் தேசியப் பரிசும் நற்சான்றும் பெற்றது.

உசாத்துணை


✅Finalised Page