under review

ஃப்ளாரென்ஸ் ஸ்வெயின்ஸன்

From Tamil Wiki

To read the article in English: Florence Swainson. ‎

ஃப்ளாரென்ஸ் ஸ்வெயின்ஸன்

ஃப்ளாரென்ஸ் ஸ்வெயின்ஸன்(ஃப்லாரென்ஸ் ஸ்வெயின்ஸன். புளாரென்ஸ் சுவெயின்சன். பிளாரென்ஸ் ஸ்வெயின்சன்) (Miss. Florence Swainson) (1853- 1946) ஆங்கில மதப்பரப்புனர், கல்வியாளர். சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் காதுகேளாதோர் பள்ளிகளை நிறுவியவர்.

பிறப்பு

ஃப்ளாரென்ஸ் ஸ்வெயின்ஸன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். ஸ்வெயின்ஸன் குடும்பம் பாரம்பரியம் மிக்க உயர்குடிகளில் ஒன்று.

கல்விப்பணி

ஸ்வெயின்ஸன் இளமையில்

ஸ்வெயின்ஸன் இங்கிலாந்தின் ஜனானா மிஷனரி சொசைட்டியின் (Church of England Zenana Missionary Society) ஊழியராக 1882-ல் இந்தியா வந்து பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஒரு பெண்கள் கல்லூரியில் பணிபுரிந்தார். உடல்நிலை நலிவடையவே இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்றார். திரும்பவும் 1890-ல் இந்தியா வந்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருக்கும் சாரா டக்கர் கல்லூரியில் செவிலியராக பணிபுரிந்தார். செவிலியர் பணியோடு ஆதரவற்ற பெண்களுக்கு தையல் கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்தார். அக்காலத்தில் பெண்களுக்கான சுயதொழிலாக தையல் விளங்கியது. அவர்களுக்கு வாழ்க்கையில் சமூக-பொருளியல் விடுதலையையும் வழங்கியது.

ஃப்ளாரென்ஸ் 1895-ல் அவரிடம் தையல் கற்க வந்த ஓர் ஊமைப்பெண் கற்றுக்கொள்ள முயல்வதை கண்டு அவர் மேல் ஆர்வம் கொண்டார். அப்பெண் தையல் கற்று, தற்சார்புடன் வாழ்வதை கண்டு மேலும் மூன்று ஊமைப்பெண்கள் வகுப்பில் சேர்ந்தனர். அதை இறையாணை என கருதிய செல்வி ஸ்வெயின்ஸன் 1897-ல் ஒரு சிறு பள்ளியை ஆரம்பித்துப் படங்களையும் எழுத்துக்களையும் காட்டி மொழியின் அடிப்படைகளைக் கற்பிக்கலானார். இது காது கேளாதோர் மற்றும் ஊமைகளுக்காக தெற்காசியாவில் அமைக்கப்பட்ட முதல் பள்ளியாகும்[1].

மேலும் ஊமைகள் வகுப்பில் சேரவே ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து ஊமையர்க்கான பள்ளியாக நடத்தினார். மாணவிகளின் தொகை பெருகவே பிளாரன்ஸ் ஸ்வெயின்சன் பாடசாலை விரிவடைந்தது. 1900-ஆம் ஆண்டு 14 ஏக்கர் நிலத்தை வாங்கி பல கட்டிடங்களுடன் மாணவர்கள் தங்கி பயிலக்கூடிய முழுமையான கல்வி நிலையமாக ஆக்கினார். தனக்கு வாரிசுரிமையாக வந்த பொருள் அத்தனையையும் அதற்குச் செலவழித்தார். கேட்கும் திறனற்றவர்களுக்கு கற்பிக்கும் பயிற்சி பெற்றவர்களை ஆசிரியைகளாக அமர்த்தி கற்பித்தார். அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களை மேலும் ஆசிரியைகளை உருவாக்கினார். ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தனித்தனியாக இயங்கிவந்த பள்ளிகள், 1901-ல் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாக அரசு அங்கீகாரம் பெற்றன. அவரை தொடர்ந்து, செல்வி மார்கன் (Miss. Morgan) மற்றும் ரெவெரெண்ட் சார்ல்ஸ் சிதெண்டென் (Rev. Charles Chittenden) ஆகியோர் பாளையங்கோட்டை காதுகேளாதோர் பள்ளியின் வளர்ச்சியில் பங்காற்றினர்.

ஸ்வெயின்ஸன் பள்ளியில் கற்கும் மாணவர்கள்

ஸ்வெயின்ஸன் 1912-ல் 7 மாணவர்களுடன், சென்னை மைலாப்பூரில் காதுகேளாதோர் பள்ளியை நிறுவினார் (CEZMS School for the Deaf, தற்பொழுது CSI Higher Secondary School for the Deaf). தமிழகத்தின் மிகப்பெரிய காதுகேளாதோர் பள்ளியாக அது இன்று செயல்பட்டு வருகிறது.

மறைவு

1920-ல் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்ற ஸ்வெயின்ஸன் மார்ச் 3, 1946 அன்று தமது 93-வது வயதில் காலமானார்.

உசாத்துணை

குறிப்புகள்

  1. “School for the Deaf and Dumb at Palamcottah,” India’s Women and China’s Daughters XXVIII, no. 270 (December 1908): 179.


✅Finalised Page