under review

அயோத்திதாச பண்டிதர்

From Tamil Wiki
அயோத்திதாச பண்டிதர்
புத்தமார்க்க வினாவிடை
அயோத்திதாசர் ஆய்வுகள்
வைத்தியர் அயோத்திதாசர்
அயோத்திதாசரின் சமூகச்செயல்பாடுகள்
பூர்வபௌத்தனின் சொல்லாடல்
வாழும் பௌத்தம்
அயோத்திதாசர் தபால்தலை
அயோத்திதாசர் சிலை
அயோத்திதாசர் நூல்
அயோத்திதாச கௌதம சன்னா

அயோத்திதாச பண்டிதர் (காத்தவராயன்) (மே 20, 1845 – மே 5, 1914) ( அயோத்திதாஸ பண்டிதர், அயோத்திதாசர்) தமிழறிஞர், பண்பாட்டுச் சிந்தனையாளர், தலித் அரசியல் முன்னோடி. திராவிடச் சிந்தனைகளின் முன்னோடியாகவும் சாதி ஒழிப்புப் போராளியாகவும் கருதப்படுகிறார். 'தமிழன்', 'திராவிடன்', 'பூர்வ பெளத்தம்’ என்ற கருத்தியலின் முன்னோடியாக அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர் காத்தவராயன். அயோத்திதாச பண்டிதர் மே 20, 1845-ல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள மக்கிமா நகரில் கந்தசாமிக்கு பிறந்தார்.

தாத்தா கந்தப்பர்

அயோத்தி தாசரின் தாத்தா கந்தப்பரின் சொந்த ஊர் கோவை அரசம்பாளையம் என குறிப்புகள் உண்டு, அவர் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தார். ஆரிங்டன் என்னும் ஆங்கிலேய நிர்வாகியிடம் இல்ல உதவியாளராகப் பணிபுரிந்தார். ஆரிங்டனின் நண்பர் எல்லிஸ் 1825-ல் சென்னையில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவி தமிழ் பழந்தமிழ் நூல்களை பதிப்பித்து வந்தார். இவருக்கு உதவியாக மாயூரம் வேதநாயக சாஸ்திரியார் போன்றவர்கள் இருந்தனர். பரம்பரைச் சித்த மருத்துவரான கந்தப்பர் தன்னிடமிருந்த திருக்குறள் மூலம், திருவள்ளுவ மாலை, நாலடி நாநூறு ஆகியவற்றின் சுவடிகளை எல்லிஸுக்கு அளித்தார். எல்லிஸின் உதவியாளர்களான தாண்டவராய முதலியார், முத்துசாமிப்பிள்ளை ஆகியோரின் உதவியுடன் திருக்குறள் 1831-ல் முதன் முதலாக அச்சேறியது.

தந்தை கந்தசாமி

கந்தசாமி மயிலாப்பூரில் பரம்பரை தொழிலான சித்த மருத்துவத்துடன் பச்சைக்கற்பூரம், பூ, நீலம், சோப்பு ஆகியவற்றையும் வணிகம் செய்துவந்தார். கந்தசாமி முறையான தமிழ்க்கல்வி கொண்டவர்.

கல்வி

அயோத்திதாசர் தனது தந்தையிடமும், காசிமேடு சதாவதானி வைரக்கண் வேலாயுதம் புலவரிடமும் (வாழ்க்கைக்காலம் 1830 -1892) மெட்ராஸ் ப்ளாக் டவுன் பகுதியில் வாழ்ந்துவந்த வல்லக்காளத்தி வீ. அயோத்திதாசப் பண்டிதரிடமும் (வாழ்க்கைக் காலம் 1835 -1900) பரங்கிமலை பத்ர தேசிகானந்த அடிகளிடமும் கல்வி கற்றார். தமிழ், சித்த மருத்துவம், தத்துவம் ஆகியவற்றில் புலமை கொண்டார். ஆங்கிலம், வடமொழி, பாலி போன்ற மொழிகளில் புலமை பெற்றவர். தன் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தனது பெயரை அயோத்திதாசர் என மாற்றிக் கொண்டார்.

தனிவாழ்க்கை

அயோத்திதாச பண்டிதர் நீலகிரியில் தோடர் இனத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனைவியுடன் பர்மாவுக்குச் சென்ற அயோத்திதாசர் அங்கே பத்தாண்டுகள் வாழ்ந்தார். அவர்களுக்கு கண்பார்வையற்ற தசரதராமன் என்ற குழந்தை பிறந்து சில தினங்களில் இறந்தது. குழந்தை இறந்த சோகத்தில் அயோத்திதாசரின் மனைவி காலமானார்.

அயோத்திதாச பண்டிதர் மீண்டும் நீலகிரிக்கே வந்தார். ஊர் திரும்பிய அயோத்திதாசர் முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவதாக மணந்தார். தனலட்சுமியின் குடும்பம் வைணவ சமய மரபுகளைப் பின்பற்றியது. தன் ஆண் குழந்தைகளுக்கு மாதவராம், பட்டாபிராமன், சானகி ராமன், இராசராம் என்றும், புத்த மதத்தைத் தழுவிய பின்னர் பிறந்த தனது பெண் குழந்தைகளுக்கு அம்பிகா தேவி, மாயா தேவி என்றும் பெயர் சூட்டினார். அயோத்திதாசருக்குப் பிறகு அவருடைய பணிகளை முன்னெடுத்தவர் அவருடைய மகனாகிய பட்டாபிராமன். அயோத்திதாசரின் 'தமிழன்' இதழை பட்டாபிராமன் சிலகாலம் நடத்தினார்.

சித்த மருத்துவம்

அயோத்திதாசரைப் பற்றிய குறிப்புகள் திரு.வி.க-வின் நாட்குறிப்புகளில் உள்ளன. அதில் அயோத்திதாசரை தங்களது குடும்ப மருத்துவர் என திரு.வி.க. குறிப்பிட்டார். இளம்பருவத்தில் முடக்குவாத நோயால் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் பாதிக்கப்பட்டிருந்தபோது, அயோத்திதாசர்தான் சித்த மருத்துவத்தின் மூலம் எழுந்து நடக்க வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பாம்பு போன்ற விஷக் கடிகளுக்கு அவர் மருந்து தரமாட்டார் என்றும் பார்வையாலேயே விஷத்தை இறக்கிவிடும் கலைகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார் என்றும் அவரைப் பற்றி கூறியுள்ளார். தமிழக அரசு சித்த மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதரின் நினைவாக 'அரசு அயோத்திதாசர் சித்த மருத்துவமனை' எனப் பெயர் சூட்டியது.

ஆன்மிகம்

அயோத்திதாசர் தொடக்கத்தில் அத்வைதக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். 'துளசி மாடம்' என்னும் மடத்தை நிறுவினார். நிலம்பெறப்பட்டு குடிலும் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 1870-ம் ஆண்டு 'அத்வைனந்தா சபை'யைத் தோற்றுவித்தார். தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையினப் பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்தார். இதன் மூலம், அத்வைத கொள்கைகளைப் பரப்பினார்.

அதன்பின் வைணவ மதத்தில் ஈடுபாடு கொண்டு தீவிர வைணவராக திகழ்ந்தார். தன் குழந்தைகளுக்கு வைணவப் பெயர்களைச் சூட்டினார். அதன்பின்னரே பௌத்தத்திற்கு மாறினார்.

பூர்வ பெளத்தம்

1882-ல் அயோத்திதாச பண்டிதர் தன் மைத்துனர் ரெட்டமலை சீனிவாசனுடன் பிரம்மஞானசபையின் நிறுவனத்தலைவரான ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டைச் சந்தித்தார். ஆல்காட் அப்போது இலங்கையிலும் இந்தியாவிலும் பௌத்த மறுமலர்ச்சிக்கான பணிகளை முன்னெடுக்கத் தொடங்கியிருந்தார். ஆல்காட்டில் இருந்து பௌத்தம் குறித்த ஆர்வத்தை அயோத்திதாச அடைந்தார்

கோவையில் அஸ்வகோஷ் எழுதிய 'நாரதீய புராண சங்கைத் தெளிவு' என்னும் 570 பாடல்களைக் கொண்ட நூலின் சுவடிகள் அயோத்திதாசருக்குக் கிடைத்தன. அதில் இருந்தே இந்தியாவில் பௌத்தம் சாதியமைப்புக்கு எதிராக நடத்திய போராட்டம் பற்றியும், பின்னாளில் பௌத்தர்கள் அடிமைப்படுத்தப்பட்டது பற்றியும் அறிந்துகொண்டார். இந்நூலைப் பற்றிய உரைகளை எழுதிய காக்கைபாடினியார் மற்றும் நல்லுருண்டையார் ஆகியோரின் பாடல்களையும் தேடிக் கண்டடைந்து படித்தார்.

1880-களில் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 'பூர்வத் தமிழர்' என்ற பிரிவைப் பதிவு செய்யச் சொல்லி வேண்டுகோள் வைத்தார். 'ஆதித் தமிழர்', 'ஆதி திராவிடர்' போன்ற பல அடையாளங்களை முன்வைத்தார். ஆங்கிலேய அரசு அவற்றை ஏற்க மறுத்தது. "இவையெல்லாம், மொழி அல்லது இன அடையாளத்தின் கீழ் வருபவை. மத அடையாளத்தின் கீழ் இவற்றைக் கொண்டுவர முடியாது" என விளக்கம் அளித்தது. அவர் 'பூர்வ பவுத்தர்' எனும் அடையாளம் நோக்கிச் சென்றார்.

சாக்கிய பவுத்த சங்கம்

1897-ல் அயோத்திதாசர் ஆல்காட்டின் ஆலோசனைப்படி இலங்கை சென்று பௌத்த மதத்தை தழுவினார். திரும்பிவந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை திரும்பியபின் ‘புத்தரெனும் இரவுபகலற்ற ஒளி’ என்னும் நூலை எழுதினார். ஆல்காட் உதவியுடன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பள்ளிகளை நடத்தினார். பௌத்தத்தைப் பரப்பும் நோக்குடன் 'சாக்கிய பவுத்த சங்கத்தை' தோற்றுவித்தார். சிங்காரவேலர், லட்சுமிநரசு ஆகியோர் அந்த இயக்கத்தில் இணைந்தனர். தீண்டாமைக்கு எதிராகவும் பௌத்த மதத்தை பரப்பவும் அவ்வியக்கம் தீவிரமாக பணியாற்றியது. சிங்காரவேலர் பின்னர் பௌத்ததில் ஆர்வமிழந்து நாத்திகக் கொள்கை நோக்கிச் சென்றார். லட்சுமிநரசுவும் பௌத்த நம்பிக்கையை கைவிட்டார்.

தென்னிந்திய பவுத்த சாக்கிய சங்கம்

அயோத்திதாச பண்டிதர் 1902-ல் 'தென்னிந்திய பவுத்த சாக்கிய சங்கம்' எனும் அமைப்பை ராயப்பேட்டையில் நிறுவி பவுத்த மதக் கொள்கைகளைப் பரப்பினார்.

அரசியல் வாழ்க்கை

அயோத்தி தாசர் இளமையிலேயே தலித் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1859-ல் தலித் மக்களின் முதல் இதழான 'சூர்யோதயம்' தொடங்கப்பட்டது. வேங்கிடசாமிப் பண்டிதர் இவ்விதழை நடத்தினார். 1871-ல் 'பஞ்சமன்' இதழ் வெளிவந்தது. இவ்விதழ்களை அயோத்தி தாசர் பயின்றுவந்தார்.

அயோத்திதாசருக்கு வைரக்கண் வேலாயுதம் புலவர், புதுப்பேட்டை வேங்கிடசாமி பண்டிதர், அரங்கையதாசப் பண்டிதர். மயிலை சின்னத்தம்பி, புலவர் பா.அ.அ.இராசேந்திரம் பிள்ளை, போதகர் ஜான் இரத்தினம், சாங்கு சித்த சிவலிங்க நாயனார் ஆகியோர் அரசியலிலும் இலக்கியத்திலும் துணைவர்களாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தனர்.

அயோத்திதாச பண்டிதர் 'திராவிட மகாஜன சபை'யை நிறுவினார். டிசம்பர் 1891-ல் திராவிட மகாஜன சபையின் சார்பாக, ஊட்டியில் மாநாடு நடத்தப்பட்டது. இதில், "பறையர் எனக் கூறுவது குற்றம் எனச் சட்டம் இயற்ற வேண்டும், பொது இடங்களில் நுழைய உரிமை அளிக்க வேண்டும், கல்வி வசதி செய்துதர வேண்டும்" என்பன உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு காங்கிரஸ் செயலாளர் எம்.வீரராகவாச்சாரியாருக்கு டிசம்பர் 21, 1891 அன்று அனுப்பப்பட்டது. நகல் பிரிட்டிஷ் அரசுக்கும் அனுப்பப்பட்டது. இந்த மாநாட்டில்தான் தலித் மக்களைக் குறிக்க 'ஆதிதிராவிடர்' என்னும் சொல்லை அயோத்திதாசர் முதல்முறையாகப் பயன்படுத்தினார்.

ஏப்ரல் 1892-ல் சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற சென்னை மகாஜன சபை மாநாட்டில், நீலகிரி மாவட்டத்தின் பிரதிநிதியாக அயோத்திதாசர் கலந்துகொண்டார். இம்மாநாட்டில்தான், ஒடுக்கப்பட்டோருக்கு இலவசக் கல்வி, புறம்போக்கு தரிசு நிலம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். தாழ்த்தப்பட்டவர்களின் கோயில் நுழைவுக்கு அனுமதி கேட்டபோது மறுத்ததால் இலவசக் கல்வியும் நிலமற்றவர்களுக்கு நிலமும் கேட்டார்.

1893-ல் தாழ்த்தப்பட்டவர்களிடம் கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. பஞ்சமி நிலம் உருவாக இந்த முன்னெடுப்பு காரணமாக அமைந்தது.

1894-ல் தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறினால்தான் பிரச்சினைகள் தீரும் என்று அரசுக்கு பரிந்துரை செய்த வருவாய்த்துறை தலைமை ஆய்வாளர் சீனிவாச ராகவ ஐயருக்கு ஒரு திறந்த மடலை எழுதி மதமாற்ற ஆலோசனையை அயோத்திதாசர் கண்டித்தார்

அக்டோபர் 30,1912 தேதியிட்ட இதழில் தமிழன் இதழில், இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தால் ஆதி தமிழர்களிடம் அரசியல் அதிகாரத்தை வழங்கவேண்டுமென ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை வைத்தார்.

கொள்கைகள்

அயோத்திதாசரின் அரசியல்-சமூகப் பணிகளை தொகுத்துரைக்கும் ஆய்வாளர் கௌதம சன்னா சாதி எதிர்ப்பு, வேஷப்பிராமண எதிர்ப்பு, கல்வி. இட ஒதுக்கீடு, பெண் உரிமை, இந்துமத எதிர்ப்பு, பௌத்த நெறி ஆகியவற்றை அவருடைய செயல்திட்டங்களாக கருதுகிறார்.

சாதி எதிர்ப்பு

அயோத்திதாசர் தமிழர்களை சாதிபேதமற்ற திராவிடர்கள், சாதி பேதமுள்ளவர்கள் என இருவகையாக பிரிக்கிறார். சாதிபேதமற்ற ஆதிதிராவிடகர்கள் பழங்காலத்தில் பௌத்தர்களாக இருந்து பின்னர் ஒடுக்கப்பட்டவர்கள் என்று கூறினார்.

வேஷப்பிராமண எதிர்ப்பு

இன்று பிராமணர்களாக அறியப்படுபவர்கள் உண்மையான பிராமணர்கள் அல்ல, அவர்கள் பிராமணர்களாக வேஷம்போடுகிறார்கள் என்று அயோத்திதாசர் சொன்னார். உண்மையான பிராமணர்கள் உயிர்களிடன் அன்பும் உலகம் முழுக்க தங்கள் உறவு எனக்கருதும் பார்வையும் கொண்டவர்கள். வரலாற்றில் ஒரு கட்டத்தில் பிராமண அடையாளம் கொண்ட ஒரு தரப்பினர் அதிகாரத்தைக் கைப்பற்றினர் என வாதிடுகிறார்.

கல்வி

அயோத்திதாசர் மேற்கத்திய முறையிலான கல்விக்காக குரல்கொடுத்தார்.

இட ஒதுக்கீடு

1892-ல் நீலகிரி மாநாட்டு தீர்மானத்திலேயே அயோத்திதாசர் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவ உரிமையை வலியுறுத்தினார்

பெண் உரிமை

ஆணுக்கும் பெண்ணுக்கும் சட்டபூர்வமான சம உரிமை தேவை என்பதை அயோத்திதாசர் வலியுறுத்திவந்தார். கைம்பெண் மறுமணம், பெண்களுக்கு தொழில்கல்வி ஆகியவற்றை கோரினார்.

இந்துமத எதிர்ப்பு

இந்து என்பது பௌத்தர்களின் பெயரான இந்தியம் என்பதில் இருந்து வந்தது என்றும், இந்திரர் தேசம் என்னும் பொருளில் இந்தியா அழைக்கப்பட்டது என்றும், இங்கே குடியேறிய சூழ்ச்சிக்காரர்கள் இந்து என்ற பெயரை திருடிக்கொண்டார்கள் என்றும் அயோத்திதாசர் சொன்னார். இந்து புராணங்கள், திருவிழாக்கள், சடங்குகள் எல்லாமே பௌத்தர்களிடமிருந்து திருடிக்கொண்டு திரிக்கப்பட்டவை என்றார். இந்து மூடநம்பிக்கைகளை கடுமையாகக் கண்டித்தார்

பௌத்தநெறி

தாழ்த்தப்பட்ட மக்கள் பூர்வ பௌத்தர்கள் என்றும், பௌத்தம் வீழ்த்தப்பட்டபோது அவர்கள் அடிமையானார்கள் என்றும் சொல்லும் அயோத்திதாசர் அனைத்து திராவிடர்களும் தங்கள் தொல்மதமாகிய பௌத்தத்தை தழுவ வேண்டும் என அறிவுரை சொன்னார்.

மாற்று வரலாற்றுப் பார்வை

அயோத்திதாசரின் கருத்துச் செயல்பாடுகள் இரண்டு களங்களில் நிகழ்ந்தன. பிரிட்டிஷ் அரசினர் அளித்த நவீனக் கல்வி, நவீன குடியுரிமை, சட்டபூர்வமான உரிமைகள் ஆகியவற்றுக்காக போராடுதல் மற்றும் இந்திய வரலாறு, இந்திய மதக்கொள்கைகள் ஆகியவற்றை ஒட்டி ஒரு முழுமையான மாற்றிப்பார்வையை முன்வைத்தல். அயோத்திதாசர் முன்வைத்த மாற்று வரலாற்றுப் பார்வை ஐரோப்பிய நவீன வரலாற்றாய்வின் முறைமை கொண்டது அல்ல. இந்திய வரலாற்றுநோக்கு கொண்டது. ஆகவே பெரும்பாலும் சொல்லாய்வு மற்றும் தொன்மவிளக்கங்கள் வழியாகவே அந்த ஆய்வை நிகழ்த்துகிறார். மாற்று வரலாற்றுக்கான முன்வரைவு என்னும் அளவில் அவை கொள்ளத்தக்கவை. அவரைத் தொடர்ந்து அந்த வரலாறு விரித்தெடுக்கப்படவில்லை.

ஆதிவேதம்

'பூர்வ தமிழொளியாம் புத்தரது ஆதிவேதம்' என்னும் நூலை அயோத்திதாசர் தமிழன் இதழில் தொடராக வெளிவந்தது. 1912-ல் நூல் வடிவம் கொண்டது. இலங்கை புத்த பிக்கு ஒருவரின் உதவியுடன் இந்நூல் உருவாக்கப்பட்டது. புத்தரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வரலாறு தொகுக்கப்பட்டு பௌத்த தத்துவ வரலாற்றையும் விளக்குகிறது. 28 காதைகள் கொண்ட இந்நூலில் இறுதிப்பகுதி 'ஆதிவேத விளக்கம்' என அமைந்துள்ளது.

இந்திரர் தேச சரித்திரம்

அயோத்திதாசர் மேற்கொண்ட ஆய்வுகளில் ஒன்று ’இந்திர தேச சரித்திரம்’. இந்திர தேசத்தின் பிரதான கோட்பாடான ’புத்த தர்மத்தை’ ஏற்று அரசர்களும் மக்களும் இன்புற்று வாழ்ந்ததாகவும், விவசாயம் செழித்திருந்ததாகவும், அறிவிலும் கலையிலும் மக்கள் தேர்ச்சி பெற்று விளங்கியதாகவும் கூறினார். தான் கட்டமைத்த இந்திர தேச வரலாற்றை முன்னெடுத்து இந்திய வரலாறு என்பது பூர்வ பவுத்தத்துக்கும், ஆரியத்துக்கும் நடந்த போராட்டம் என்று தன் இந்திர தேச வரலாற்றின் மூலம் எடுத்துரைத்தார்.

எள் செடியின் விதையிலிருந்து நெய் கண்டுபிடித்த நாளே தீபாவளி என விளக்கம் தந்தார். அதற்கு ஆதாரமாக ஜப்பானில் இன்றும் நுகர்பொருள் கண்டுபிடிப்பு தினமே தீபாவளி தினமாகக் கொண்டாடுவதை எடுத்துக் காட்டினார்.

ஒரு பைசா தமிழன்

இதழியல்

திராவிடப் பாண்டியன்

அயோத்திதாச பண்டிதருக்கு ரெவரன்ட் ஜான் ரத்தினம், ஆல்காட் பிரபு உள்ளிட்டோரின் நட்பு கிடைத்தது. 1882-ஆம் ஆண்டு "திராவிடர் கழகம்" என்ற பெயரில் ஜான் ரத்தினம் ஒரு அமைப்பை நடத்தினார். 1885-ல் நண்பர் ஜான் ரத்தினத்துடன் இணைந்து 'திராவிடப் பாண்டியன்' எனும் இதழைத் தொடங்கினார். அயோத்திதாசர் அந்த இதழின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.1887 வரை இவ்விதழ் நடைபெற்றது.

தமிழன்
ஒரு பைசாத் தமிழன்

அயோத்திதாச பண்டிதர் ஜூன் 19, 1907 அன்று 'ஒரு பைசாத் தமிழன்' எனும் பத்திரிகையைத் தொடங்கினார். "ஒரு நயா பைசாவுக்குக் கூட தகுதியில்லாதவனாகத் தமிழன் இருந்துவருகிறான்" எனும் வேதனையை விளக்கும் விதமாக 'ஒரு பைசாத் தமிழன்' எனப் பெயர் வைக்கப்பட்டதாகக் கூறினார். ஆகஸ்ட் 26, 1908-ல் 'அச்சுகூடமும் பத்திரிக்கைப்பெயரும் மாறுதலடைந்தது' என்ற விளக்கத்துடன் 'தமிழன்' என பத்திரிக்கை பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

இந்தப் பத்திரிகையில் தொடர்ந்து, பிராமணிய சிந்தனைகளுக்கு எதிரான கட்டுரைகளை எழுதிவந்தார் அயோத்திதாசர். அதன்மூலம், இந்திய வரலாற்றையே அவர் மறுகட்டமைப்பு செய்தார் எனலாம். இது பல தரப்பிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கார்த்திகை தீபம், தீபாவளி, பொங்கல், திருமணச் சடங்கு, இறுதிச் சடங்கு உள்ளிட்ட சடங்குகள் எல்லாம் பவுத்தம் வசம் இருந்தவை என்றும் காலப்போக்கில், இவையெல்லாம் எப்படி இந்துமயமானது என்பதையும் விளக்கி எழுதினார்.

இதே காலகட்டத்தில் 'சுதேசமித்திரன்' பத்திரிகையுடன் கடும் வார்த்தைப் போர்களையும் நடத்தியுள்ளார். ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் பாரதியாருக்கும் அயோத்திதாசருக்கும் இடையே காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. 1914 வரை இவ்விதழ் செயல்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

அயோத்திதாச பண்டிதர் தாழ்த்தப்பட்டவர்களின் வரலாற்றை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக இரட்டை காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சூளாமணி, திருக்குறள், நன்னூல், வீரசோழியம், நாலடியார், காக்கைபாடினியம் போன்ற தமிழ் இலக்கிய சான்றுகளை எடுத்துக் கையாண்டார்.

திருவள்ளுவர் பற்றிய புனைவுகளை ஆதாரத்துடன் வெளியிட்டு உண்மையை விளக்கினார். 'விபூதி ஆராய்ச்சி', 'கபாலீஸ்வரர் சரித்திர ஆராய்ச்சி', 'அரிச்சந்திரனின் பொய்கள்', 'திருவள்ளுவர் வரலாறு', திரிக்குறள் எனும் பெயரில் திருக்குறளுக்கு தெளிவுரை, புத்த மார்க்க வினா விடை, இந்திர தேச சரித்திரம், விவேக விளக்கம் போன்ற படைப்புகளையும் எழுதினார். திருக்குறள் உரையானது 55 அதிகாரங்களுடன் அவர் காலமானதால் நின்று விட்டது.

மறைவும் மீட்பும்

அயோத்திதாச பண்டிதர் மறைந்தபின்னர் அவருடைய தென்னிந்திய பவுத்த சாக்கிய சங்கம் மெல்ல வலுவிழந்தது. இந்தியாவில் 1909-ல் மிண்டோ மார்லி சீர்திருத்தத்தை ஒட்டி ஜனநாயக அரசியல் தொடங்கியது. இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றன. அச்சூழலில் மதம், ஆன்மிகம் ஆகியவற்றுக்கு பதிலாக அரசியல் முன்னெழுந்தது. அயோத்திதாசரின் ஆதரவாளர்கள் மெல்லமெல்ல ஜஸ்டிஸ் கட்சியிலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஈடுபட்டனர். பின்னர் திராவிடர் கழக ஆதரவாளர்களாயினர்.

1869-ல் தாழ்த்தப்பட்டோருக்கான முதல் இதழான சூரியோதயம் தொடங்கப்பட்டது முதல் தமிழகத்தில் உருத்திரண்டு ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்காலம் வலுவுடன் இருந்தது தாழ்த்தப்பட்டோர் விடுதலை அரசியல். அவ்வரசியல் மறைந்து, அதில் ஈடுபட்டவர்கள் திராவிடர் கழகத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் ஈடுபட்டனர். அயோத்திதாசரின் பெயர் பொதுவெளியில் இருந்து மறைந்தது. அவருடைய நூல்கள் பெரும்பாலும் மறு அச்சு வெளியாகமல் ஆயின.

தலித் ஆய்வாளரான அன்பு பொன்னோவியம் அயோத்தி தாசரின் நூல்களை சிறிய அளவில் அச்சிட்டும், அயோத்திதாசர் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டும் வந்தார். தமிழகத்தில் 1980-களுக்குப்பின் தலித் அரசியல் உருவாகி, தலித் பண்பாடு மற்றும் தலித் வரலாறு பற்றிய ஆர்வம் புத்துயிர்கொண்டது. அதன் விளைவாக 1999-ல் ஆய்வாளர் ஞான அலோய்ஸியஸ் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி சார்பாக அயோத்திதாசரின் எழுத்துக்களை மூன்று பெரிய தொகுதிகளாக ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ என்னும் பெயரில் வெளியிட்டார். அதன் பின்னரே அயோத்திதாசர் மேல் ஆய்வாளர்களின் பார்வை விழுந்தது. தமிழக தலித் அறிவியக்கம் அவரை தங்கள் முகப்படையாளமாக முன்வைத்தது. அயோத்திதாசர் பற்றிய நூல்கள் வெளிவரத் தொடங்கின. அயோத்திதாசருக்கான நினைவிடங்களும் உருவாயின.

நினைவுகள்

  • 1999-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 2005-ம் ஆண்டு தாம்பரத்தில் அயோத்திதாசர் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டது.
  • அக்டோபர் 21, 2005-ல் அயோத்திதாசருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
  • அயோத்திதாசர் நடத்திய ‘ஒரு பைசாத் தமிழன்’ இதழின் நூற்றாண்டு விழாவை, 2008-ல் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி மிகப்பெரிய அளவில் அரசு விழாவாகக் கொண்டாடினார்.
  • அயோத்திதாசப் பண்டிதரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அவரின் வாரிசுகளுக்குப் பத்து லட்சம் ரூபாய் நிதியும் 2008-ல் வழங்கப்பட்டது.
  • 2019-ம் ஆண்டு, சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் போன்ற துறைகளில் முத்திரை பதித்தவர்களுக்கு, 'அயோத்திதாசப் பண்டிதர் விருது' வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
  • 2022-ல் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

வாழ்க்கை வரலாறுகள்,ஆய்வுகள்

  • அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை: டி. தருமராஜ்
  • நான் பூர்வ பெளத்தன்: 2003: டி. தருமராஜ்
  • அயோத்திதாச பண்டிதர்: ந. முத்துமோகன் (தமிழில்: இந்திரா மோகன்)
  • அயோத்திதாசர் சிந்தனைகள்: ஞான அலாய்சியஸ்
  • க. அயோத்திதாசர் ஆய்வுகள்: ராஜ் கெளதமன்
  • அயோத்திதாச பண்டிதரின் சொற்பொழிவுகள்: முனைவர் பெ.விஜயகுமார்
  • அயோத்திதாச பண்டிதரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்: முனைவர் பெ.விஜயகுமார்
  • பன்முகப் பார்வையில் பண்டித அயோத்திதாசர்: முனைவர் பெ.விஜயகுமார்
  • க. அயோத்திதாச பண்டிதர்: இந்திய இலக்கியச் சிற்பிகள் கௌதம் சன்னா
  • அயோத்திதாசர் வாழும் பௌத்தம் ஸ்டாலின் ராஜாங்கம்
  • வைத்தியர் அயோத்திதாசர் ஸ்டாலின் ராஜாங்கம்
  • பூர்வ பௌத்தனின் சாட்சியம் ப.மருதநாயகம்
  • அயோத்திதாசர் சமூகசிந்தனைகளும் செயல்களும் வெ.வெங்கடாசலம்

மறைவு

அயோத்திதாசப் பண்டிதர் மே 5, 1914-ல் காலமானார்.

வரலாற்று இடம்

அயோத்திதாசர் இரண்டுவகையில் தமிழ் வரலாற்றில் முதன்மையானவர். தமிழக தலித் இயக்கத்தின் முதல்மூவர்களில் அவர் முதலிடத்தில் இருப்பவர் (அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா) தமிழக தலித் அரசியலியக்கத்தின் முகமாக அவர் இன்று அறியப்படுகிறார். தமிழ்ச் சிந்தனை வரலாற்றில் அயோத்திதாசர் மாற்றுவரலாற்றுக்கான பாதை ஒன்றை உருவாக்கிய முதல்சிந்தனையாளர் என்னும் இடம் உடையவர். தமிழர் வரலாற்று உருவகமும், இந்திய வரலாற்று உருவகமும் காலனியாதிக்கவாதிகள், இந்தியதேசியவாதிகள், தமிழ்த்தேசியவாதிகள் (துணைத்தேசியவாதிகள்) என்னும் மூன்று தரப்பினர் நடுவே நடந்த விவாதம், சமரசம் வழியாக திரண்டுவந்தவை. இந்திய அளவில் அயோத்தி தாசரே நான்காவதாக ஒரு தலித் சார்பான வரலாற்று உருவகத்தை முன்வைத்தவர். இந்தியாவின் மொத்த வரலாற்றையும் முற்றிலும் புதிய ஒரு கோணத்தில் பார்ப்பதற்கான வாய்ப்புகளை அவர் தன் ஆய்வுகளினூடாக உருவாக்கினார்.

நூல்கள் பட்டியல்

  • அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
  • அம்பிகையம்மன் சரித்திரம்
  • அரிச்சந்திரன் பொய்கள்
  • ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
  • இந்திரர் தேச சரித்திரம்
  • இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம்
  • கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
  • சாக்கிய முனிவரலாறு
  • திருக்குறள் கடவுள் வாழ்த்து
  • திருவள்ளுவர் வரலாறு
  • திரிக்குறள் (திருக்குறள் உரை விளக்கம்)
  • நந்தன் சரித்திர தந்திரம்
  • நூதன சாதிகளின் உள்வே பீடிகை
  • புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி
  • புத்த மார்க்க வினா விடை
  • மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
  • முருக கடவுள் வரலாறு
  • மோசோயவர்களின் மார்க்கம்
  • யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
  • விபூதி ஆராய்ச்சி
  • விவாஹ விளக்கம்
  • வேஷ பிராமண வேதாந்த விவரம்
  • பூர்வ தமிழ்மொழியாம் புத்தாது ஆதிவேதம்
  • வேஷபிராமண வேதாந்த விவரம்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page