being created

ஸ்வாமிநாத ஆத்ரேயன்

From Tamil Wiki
Revision as of 23:26, 3 September 2022 by ASN (talk | contribs) (Para Added, Image Added; Inter Link Created)
ஸ்வாமிநாத ஆத்ரேயன்
ஸ்வாமிநாத ஆத்ரேயன்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உபன்யாசகர், இசைவல்லுநர் எனப் பன்முக அடையாளத்துடன் இலக்கிய உலகில் செயல்பட்டவர் ஸ்வாமிநாத ஆத்ரேயன் (ஸ்வாமிநாத ஆத்ரேயர்; ஸ்வாமிநாத ஆத்ரேயா; சுவாமிநாத ஆத்ரேயன்) (1919-2013). தஞ்சை எழுத்தாளர்கள் பலருக்கு முன்னோடியாகவும், நண்பராகவும் திகழ்ந்தவர். ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் அறிந்தவர். தனது இலக்கியப் பணிகளுக்காக ‘ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சம்ஸ்தான்’ விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நெருக்கமான சீடர்களுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

ஸ்வாமிநாத ஆத்ரேயன், அன்றைய திருவாரூர் அருகே உள்ள ‘சிமிழி’ என்ற சிற்றூரில், வேத பண்டிதர், சம்ஸ்கிருத அறிஞர் ‘சிமிழி’ வெங்கட்ராம சாஸ்திரிகள்-சங்கரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையிடமிருந்து வேதக் கல்வியைக் கற்றார். தமிழை முறைப்படிக் கற்ற ஸ்வாமிநாத ஆத்ரேயன், அண்ணாமலைப் பல்கலையில் சம்ஸ்கிருதம் பயின்று, ‘வ்யாகரண சிரோமணி’ பட்டம் பெற்றார். மொழியியலிலும் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்திலேயே தனது திறமை காரணமாக துணைவேந்தர், ‘ரைட் ஹானரபிள்’ சீனிவாச சாஸ்திரியின் அன்பையும் பாராட்டுதலையும் பெற்றார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் சில காலம் ஹரிகதை உபன்யாசம் செய்து வந்தார். பின் மன்னார்குடியில் ஒரு கடையைத் தொடங்கி நடத்தினார். ஜயலக்ஷ்மியுடன் திருமணம் நிகழ்ந்தது. தொடர்ந்து தஞ்சாவூரில் ‘ஸ்ரீ லலிதா மஹால் ஸ்டோர்ஸ்’ என்ற ஆடைகள் விற்பனையகக்  கடையைத் தொடங்கி வணிகம் செய்து வந்தார். சிறிதுகாலம் சென்னை குப்புசுவாமி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார்.

ஸ்வாமிநாத ஆத்ரேயனின் சிறுகதை - சுலபா
ஸ்வாமிநாத ஆத்ரேயனின் சிறுகதை
ஸ்வாமிநாத ஆத்ரேயன் சிறுகதை - பூக்காரி

இலக்கிய வாழ்க்கை

கு.ப. ராஜகோபாலன், ஸ்வாமிநாத ஆத்ரேயனின் மனம் கவர்ந்தவராக இருந்தார். அவரது எழுத்துக்களால் கவரப்பட்ட ஸ்வாமிநாத ஆத்ரேயன், தானும் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். ’மணிக்கொடி’யில் இவரது முதல் சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து மணிக்கொடிக்குச் சிறுகதைகள் எழுதி, ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் வரிசையில் இடம் பெற்றார். ‘சுதேசமித்திரன்’, ‘சிவாஜி’, ‘சரஸ்வதி’, ‘சந்திரோதயம்’, ‘யாத்ரா’ ‘பாரிஜாதம்’, ‘எழுத்து’, ‘கணையாழி’, ‘கலாமோகினி’ போன்ற இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகின. தீபம் இதழிலும் “ராமா நீயெட’ என்ற சிறுகதை உள்ளிட்ட இவரது பல படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. அக்காலத்து முன்னணி இதழ்கள் பலவற்றிலும் இயற்பெயரிலும், புனை பெயரிலும் சிறுகதைகள், இசைக் கட்டுரைகள், வேதம் பற்றிய கட்டுரைகள், தத்துவ விளக்கங்கள் பலவற்றை எழுதியுள்ளார். கு.ப.ராஜகோபாலனைத் தனது முன்னோடியாகக் கொண்டு மாறுபட்ட கருப்பொருளில் பல்வேறு சிறுகதைகளைப் படைத்தார்.

தஞ்சை எழுத்தாளர்களான ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, திருலோக சீதாராம், தி.ஜ. ரங்கநாதன், சாலிவாகனன், எம்.வி.வெங்கட்ராம் போன்றோர் ஸ்வாமிநாத ஆத்ரேயனின் நண்பர்களாக இருந்தனர். தி. ஜானகிராமன், இவரது நெருங்கிய நண்பராக இருந்தார். இருவரும் இணைந்து உமையாள்புரம் சுவாமிநாத ஐயரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டனர் என்றாலும், இருவருமே இசைத் துறையில் ஈடுபடவில்லை. ஸ்வாமிநாத ஆத்ரேயன், சென்னை குப்புசுவாமி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் சி.சு.செல்லப்பா, சிட்டி, கி.வா.ஜ., பகீரதன், அ. சீனிவாச ராகவன், ச.து.சு. யோகி, டாக்டர் வே. ராகவன், ஆர்வி, கிருஷ்ணசாமி ரெட்டியார், வல்லிக்கண்ணன், ரா. கணபதி   போன்றோரின் நட்புக் கிடைத்தது. அது மேலும் பல படைப்புகள் வெளிவரக் காரணமானது. தமிழில் இசை சார்ந்த சிறுகதைகளை அதிகம் எழுதியவர் ஸ்வாமிநாத ஆத்ரேயன்தான்.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.