ஆய்வுசூடி
ஆய்வுசூடி (1979), ஔவையாரின் ஆத்திசூடி, பாரதியாரின் புதிய ஆத்திசூடியை அடியொற்றி இயற்றப்பட்ட நீதி நூல். இதனை இயற்றியவர் டாக்டர் தமிழண்ணல்.
வெளியீடு
ஆய்வுசூடி, ஆய்வியல் வழிகாட்டி நூலின் ஒரு பகுதியாக இடம்பெற்றது. இதனை ஏரகம் பதிப்பகம், 1979-ல் வெளியிட்டது. ஆய்வியல் வழிகாட்டி நூலை டாக்டர் தமிழண்ணலுடன் டாக்டர் மா.சு. இலக்குமணன், டாக்டர் இரா. மோகன் இணைந்து எழுதினர்.
நூல் அமைப்பு
ஆய்வுசூடி நூல், ஓரடியால் அமைந்த 122 பாடல்களைக் கொண்டது. இந்நூலின் காப்புச் செய்யுளில் மௌனத்தில் ஆழ்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தி போற்றப்படுகிறார்.
உள்ளடக்கம்
ஆய்வுசூடி நூல், 'அறிவியல் முறை பேண், ஆய்வறம் கைவிடேல், இகழ்ச்சி தவிர், ஈடுபட் டுழை, உண்மையைத் தேடு' என அகர வரிசையில் தொடங்கி, 'வெற்றியில் மனம்வை, வேண்டாதன விடு, வைப்புமுறை போற்று, வெளவ நினையேல்' என 122 நீதி மொழிகளில் சிறார்களுக்கு அறிவுரை கூறும் பாடல்களைக் கொண்டுள்ளது.
பாடல் நடை
காப்புச் செய்யுள்
மோனத் இருக்கும் மூல முதல்வனை
ஞானத் தின்வழி நாடுதல் எனவே
படிக்கும் யோகமும் பயின்றுபயின் றாய்ந்து
முடிக்கும் கடுந்தவ முயற்சியும் நோன்பும்
அடிவா னம்போல் முடிவிலா ஆய்வை
அடிவைத் தடையும் அருந்துணை யாகும்
ஆகலின்
ஆய்வு சூடி அறிவினைப் போற்றி
வாய்மையை வணங்கி வாழ்குவ மியாமே!
நீதி மொழிகள்
- அச்சுப் பிழை தவிர்
- வஞ்சினம் கூறேல்
- பட்டம் உயர்த்து
- எண்ணப் பயிற்சி செய்
- புத்தகத் துணைகொள்
- சிறப்பையே நாடு
- சீர்மை வெல்லும்
- சுருங்கச் சொல்
- சூழ்ந்தபின் செயற்படு
- நேர்மை வழிச் செல்
- நைவது கைவிடு
- நொறுக்குக தீமையை
- நோன்புபோல் பயின்றிடு
- நெளவி எனத்திரி
உசாத்துணை
✅Finalised Page