ச.பாலசுந்தரம்
ச.பாலசுந்தரம் (ஜனவரி 18, 1924 - ஆகஸ்ட் 1, 2007) தமிழறிஞர். அகராதித் தொகுப்பாளர். இலக்கண அறிஞர், பதிப்பாளர், கல்வியாளர். கரந்தை தமிழ்ச்சங்கக் கல்லூரியில் பேராசிரியராகவும் பின்னர் தஞ்சை தமிழ்ப்பல்கலை கழக அகராதிப்பணி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.
பிறப்பு, கல்வி
ச. பாலசுந்தரம் ஜனவரி 18, 1924-ல் மு.சந்திரசேகரன் – விஜயாம்பாள் இணையருக்கு பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகத் தமிழ் வித்துவான் (புலவர்) பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ச.பாலசுந்தரம் 1950 முதல் 1982 வரை கரந்தைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றினார். 1987 முதல் 1991 வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறிவழி சங்க இலக்கிய அகராதி – சங்க இலக்கியச் சொல்லடைவுத் தொகுப்புப் பணியில் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றினார். சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர், பாரதியார் பல்கலைக்கழகங்களில் தேர்வாளராகவும் வினாத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.
பேராசிரியர் ச.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பிய நூலின் மூன்று அதிகாரங்களுக்கும் அறிவியல் அடிப்படையில் ஆராய்ச்சிக் காண்டிகையுரை வரைந்த பெருமைக்குரியவர். இவர்தம் தொல்காப்பிய உரையினை அண்மையில் பெரியார் பல்கலைக்கழகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
1950-ல் ச.பாலசுந்தரம் மணம்புரிந்துகொண்டார். ச.பாலசுந்தரத்தின் மகன் பா.மதிவாணன் பேராசிரியர் மற்றும் ஆய்வாளர்
இலக்கியவாழ்க்கை
ச.பாலசுந்தரம் மரபிலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். இலக்கிய மேடைப்பேச்சாளராக அறியப்பட்டவர். கர்ந்தைக் கோவை முதலிய சிற்றிலக்கியங்களை எழுதினார். தமிழிலக்கண ஆய்வாளர். தமிழிலக்கணக் கலைச்சொற்களை அகராதிகளாக தொகுத்தார். தமிழக அரசின் புதிய தமிழ் இலக்கணநூல் ஆக்கக் குழுவில் உறுப்பினராக விளங்கினார்.
மறைவு
ச.பாலசுந்தரம் ஆகஸ்ட் 1, 2007-ல் மறைந்தார்
இலக்கிய இடம்
மரபிலக்கியத்தின் தொடர்ச்சியை கல்விக்கூடம் வழியாகவும் மேடைவழியாகவும் நிலைநாட்டியத் தமிழறிஞர். இலக்கண நூல்களை உருவாகிவரும் புதிய கணித்தொழில்நுட்ப உதவியுடன் இன்றைய கல்வித்தேவைக்காக அகராதி, தொகைநூல் வடிவில் அமைத்த முன்னோடி. நவீனத் தமிழ்ச்சூழலில் எழுதப்பட்ட இலக்கணநூலான தென்னூல் முதன்மையான பங்களிப்பு
விருதுகள், பட்டங்கள்
- பாவலரேறு பட்டம் (பனசை- பாவலர் மன்றம், திருப்பனந்தாள்)
- தொல்காப்பியப் பேரறிஞர் (கரந்தைத் தமிழ்ச்சங்கம்)
- தொல்காப்பியச் செம்மல் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
- தமிழ்ப்பேரவைச் செம்மல் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)
- பாரதிதாசன் விருது (தமிழக அரசு)
- தொல்காப்பியர் விருது
- மாமன்னர் இராசராசன் விருது
- இலங்கைப் பேராசிரியர் செல்வநாயகம் நினைவு விருது
நூல்கள்
எழுதியவை
- கரந்தைக் கோவை[1]
- புலவருள்ளம்
- புரவலருள்ளம்
- ஆதிமந்தி
- மழலைத்தேன் – மூன்று பகுதிகள்
- யான் கண்ட அண்ணா
- கலைஞர் வாழ்க
- புதிய ராகங்கள்
- சிவமும் செந்தமிழும்
- வேள் எவ்வி
- சங்க இலக்கியத் தனிச்சொல் தொகுப்பு நிரல்
- செய்யுள் இலக்கணம்
- தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரை – ஐந்து பாகங்கள்
- தென்னூல் – எழுத்து சொல் படலங்கள்
- தென்னூல் – இலக்கியப் படலம்
- எழுத்திலக்கணக் கலைச்சொற்பொருள் விளக்க அகராதி
- சொல்லிலக்கணக் கலைச்சொற்பொருள் விளக்க அகராதி
- யாப்பிலக்கணக் கலைச்சொற் பொருள் விளக்க அகராதி
- அகப்பொருளிலக்கணக் கலைச்சொற் பொருள் அகராதி
- புறப்பொருளிலக்கணக் கலைச்சொற்பொருள்துறை அகராதி
- மடைமாறிய தமிழ் இலக்கண நூல்கள்
- மொழியாக்க நெறி மரபிலக்கணம்
- மொட்டும் மலரும் மூன்று தொகுதிகள்
- மொழி இலக்கண வரலாற்றுச் சிந்தனை
- இரு பெருங்கவிஞர்கள்
- அருட்புலவோரும் அரும்பெறல் கவிஞரும்
- புகழ்பெற்ற தலைவர்கள்
- தமிழிலக்கண நுண்மைகள்
- நன்னூல் திறனாய்வுரை
- செய்யுள் இலக்கணம்
- இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழ் இலக்கணம்
- திருக்குறள் தெளிவுரை
பதிப்பித்தவை
- தனிப்பாடல் திரட்டு – இரண்டு பகுதிகள்
- திருப்பெருந்துறைப் புராணம்
- திருநல்லூர்ப் புராணம்
- நீதித்திரட்டு
- சீர்காழி அருணாசலக் கவிராயர் இராமநாடகக் கீர்த்தனை கம்பராமாயண ஒப்புப் பகுதிகளுடன் கூடிய ஆராய்ச்சிப் பதிப்பு
(மு. இளங்கோவன் பதிவை ஒட்டி)
உசாத்துணை
- முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம் அவர்கள் (18.01.1924 – 01.08.2007)
- தென்னூல் – ச.பாலசுந்தரம் இணையநூலகம்
- கரந்தைக்கோவை இணைய நூலகம்
- இருபதாம் நூற்றாண்டுக்கான இலக்கணம் இணையநூலகம்
- பாவலரேறு பாலசுந்தரனாரின் தமிழியல் பணிகள், ந. பிரகாஷ், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், ஜனவரி 2018
- பா மதிவாணன் இணையப்பக்கம்
- இனிதினிது பா.மதிவாணன் இணையப்பக்கம்
- வளர்தமிழ் இலக்கணம் இணைய நூலகம்
- வழக்குச் சொல் விளக்க அகராதி இணையநூலகம்
இணைப்புகள்
✅Finalised Page