நான்காம் தமிழ்ச்சங்கம்
மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901இல் பாண்டித்துரைத்தேவர் தலைமையில் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்தின் நோக்கம், தமிழ்க் கலாசாலை உருவாக்குதல், தமிழ் ஏடுகள் மற்றும் அச்சிட்ட தமிழ் நூல்கள் அனைத்தையும் தேடிப்பெற்று பிறருக்குப் பயன்படுமாறுத் தொகுத்து வைத்தல், வெளிவராத தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளிப்படுத்துதல், வடமொழி, ஆங்கிலம் முதலிய மொழிகளில் உள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்து வெளியிடல், தமிழ் கல்வியைப் பற்றியப் பத்திரிக்கை வெளியிடல், தமிழில் தேர்வு வைத்து உயர் தரத்தில் தேரியோர்க்குப் பட்டம் பரிசு முதலியன அளித்தல், தமிழறிஞரைக் கொண்டுச் சொற்பொழிவு நிகழ்த்துதல், அக்காலத் தமிழறிஞர்கள் யாவரையும் ஒன்றுக் கூட்டி தமிழாராய்தல், தேவையான நூல் உரை முதலியன செய்வித்தல், பிறர் செய்த நூல் உரை முதலியனவற்றை அரங்கேற்றல் முதலியனவே இச்சங்கத்தின் நோக்கம் ஆகும். இச்சங்கம் தொடங்கப்பட்ட அக்கால சூழலானது உரிமைக்காகவும், மொழிக்காகவும் போராடிக்கொண்டிருந்த நம் நாட்டு மக்களிடையே தமிழ் ஆராய்ச்சியை முன்னிலை படுத்த வேண்டும் என்பதற்காகவும் மேற்சொன்ன விஷயங்களை நிறைவேற்றும் விதமாகவும் இச்சங்கத்தாரால் 7 அமைப்புகள் நிறுவப்பட்டன. அவை, 1.சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை (கல்லூரி), 2.பாண்டியன் புத்தகச்சாலை (நூல்நிலையம்), 3.தமிழ்ச் சங்க முத்திராசாலை (நூல், பத்திரிகை வெளியிடுவதற்கான அச்சகம்), 4.கல்விக் கழகம் (வித்துவான் கூட்டம்), 5.தமிழில் தேர்வுகள் நடத்துதல், 6.நூலாராய்ச்சிச் சாலை, 7.செந்தமிழ் இதழ் ஆகியன தோற்றுவிக்கப்பட்டன. இந்த ஏழு அமைப்புகளில் செந்தமிழ் இதழின் செயல்பாட்டை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.