திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
மருள்நீக்கியார், பல்லவ நாட்டில், திருமுனைப்பாடி அருகே உள்ள திருவாமூரில், சிவபக்தர் புகழனாருக்கும் மாதினியாருக்கும் பிறந்தார் . இவரது மூத்த சகோதரி திலகவதியார். மருள்நீக்கியார் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தார். திலகவதியாருக்கு நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் உயிர் துறந்ததால், திலகவதியார் தன் உயிரை மாய்க்க எண்ணினார். அதுகண்ட மருள்நீக்கியார் அவருக்கு முன் தானும் உயிர் துறப்பதாகச் சொன்னார். சகோதரர் மீது கொண்டிருந்த அன்பால் திலகவதியார் தம் முடிவை மாற்றிக் கொண்டார். ‘இனி யாரையும் மணம் செய்து கொள்ள மாட்டேன்’ என்று முடிவு செய்து, சிவனருளைச் சிந்தித்து வாழ்ந்தார்.
மருள்நீக்கியார் சமணர் ஆனது
யாக்கை நிலையாமை பற்றி அறிந்த மருள்நீக்கியார், பல்வேறு அறப்பணிகளைச் செய்தார். சமண சமயக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சமண மதம் சார்ந்தார். சமண மதத்தின் கொள்கைகளை முழுமையாகக் கற்று, புறச் சமயத்தினரை தனது வாதங்களால் வென்று தருமசேனர் என்னும் பட்டம் பெற்றார்.
தொன்மம்/சிவனின் ஆடல்
திலகவதியார் சைவ சமயத்தின் மீது மிகுந்தப் பற்றுக் கொண்டிருந்தார். திருவதிகை வீரட்டானத்தில் மடம் ஒன்றை அமைத்து சிவத்தொண்டாற்றினார். சமணத்திலிருந்து விலகித் தன் தம்பி மீண்டும் சைவ சமயத்திற்கு வர வேண்டும் என்று தினமும் சிவபெருமானைப் பிரார்த்தித்து வந்தார்.
ஒருநாள் திலகவதியார் கனவில் தோன்றிய சிவபெருமான், “திலகவதியே, கலங்க வேண்டாம். மருள்நீக்கியான் முற்பிறப்பில் ஒரு முனிவனாக இருந்து எம்மை அடையத் தவம் செய்தவன். நாம் அவனை சூலை நோய் தந்து ஆட்கொள்வோம்” என்று அருளி மறைந்தார். திலகவதியாரும் மனம் மகிழ்ந்து, மருள்நீக்கியார் சைவ சமயம் சாரும் நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.